சென்னை

நீதிபதிகள் தேர்வுக்கான வயது விவகாரம் குறித்து தமிழக தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையமான TNPSC டி..என்.பி.எஸ்.சி.யால் தமிழக சிவில் நீதிபதிகள் பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தற்போது சட்டப்படிப்பு முடித்தவர்கள் என்றால் 27 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் வழக்கறிஞர் தொழிலில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும் என்பது விதியாகும்.   இந்த தேர்வு தொடர்பான அறிவிப்பு கடந்த மாதம் 9-ம்தேதி வெளியானது.
இந்த அறிவிப்பின்படி தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் புதிதாகச் சட்டம் படித்த மாணவர்கள் என்றால் 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.   அதைப்போல் மற்றவர்கள் என்றால் அவர்கள் வழக்கறிஞர் தொழிலில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் கொண்டவராக இருத்த வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

திருச்சியை சேர்ந்த 37 வயதான வழக்கறிஞர் ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த வழக்கு மனுவில், இந்த அறிவிப்பினால்  நீதிபதிகளாகும் எண்ணத்தில் இருக்கும் பலர் இந்த வயது வரம்புக்குள் வராமல் போகிற நிலை உள்ளது.  எனவும் இந்த விதிமுறையை மாற்றி அமைக்கக் கோரியுள்ளார்.

அவர் கடந்த 2017 நவம்பரில்தான் சட்டப்படிப்பை முடித்துள்ளார். இதனால் அவரால் நீதிபதிகள் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   அத்துடன் ரவிச்சந்திரன் தனது மனுவில், மற்ற மாநிலங்களில் வயது வரம்பு 40 வரை இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும்தான் உச்சபட்ச வயது வரம்பு 27-ஆக நிர்ணயம் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற செயல் தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சி. சரவணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக இந்த மனு விசாரணைக்கு வந்தது.  இவ்வழக்கை விசாரித்த அமர்வு இதுதொடர்பாக வரும் 21-தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு புதுவை பார் குழு, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் மற்றும் தமிழக பணியாளர் தேர்வாணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.