அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில், திருநாராயணபுரம்,  திருச்சி மாவட்டம்.

கர்வத்தால் பதவி இழந்து, மீண்டும் படைக்கும் பொறுப்பேற்ற பிரம்மா, தனக்கு வேதங்களை உபதேசிக்கும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு வேதத்தை உபதேசித்த பெருமாள், இங்கேயே பள்ளி கொண்டார். சுவாமிக்கு “வேதநாராயணர்” என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் சுவாமி சிலை மண்ணால் மூடப்பட்டது. வானவராயர் என்ற மன்னர், ஒருமுறை இவ்வூர் வந்து தங்கினார். அவரது கனவில் தோன்றிய சுவாமி, தனது சிலை மண்ணில் புதைந்திருப்பதைக் கூறினார். சிலையைக் கண்டெடுத்த மன்னர், கோயில் எழுப்பினார்.

பிள்ளைத்திருநறையூர் அரையர் என்ற பக்தர், தன் மனைவி, ஆறு குழந்தைகளுடன் சுவாமியைத் தரிசிக்க வந்தார். அப்போது சுவாமி சன்னதிக்கு மேலே பனை ஓலை வேயப்பட்டிருந்தது. அப்போது, ஓலையில் தீப்பற்றும்படி சுவாமியே மாயச்செயல் ஒன்றை நிகழ்த்தினார். அதிர்ந்துபோன பக்தர் சுவாமி மீது தீப்பிழம்புகள் விழாமல் இருக்க மனைவி, குழந்தைகளை படுக்க வைத்து, அவர்கள் மீது குறுக்காக விழுந்து தன் மீது தீப்பிழம்புகள் விழும்படி தடுத்தார். குடும்பத்தினர் மீது அக்கறை கொண்ட அவருக்கு காட்சி தந்த பெருமாள், அனைவருக்கும் மோட்சம் கொடுத்தருளினார். பிரகாரத்திலுள்ள ஆழ்வார் சன்னதியில் பிள்ளைத்திருநறையூர் அரையர் இருக்கிறார்.

வேதநாராயணர், புஜங்க சயனத்தில் தலைக்கு அடியில் நான்கு வேதங்களையும் வைத்து, நாபியிலுள்ள பிரம்மாவிற்கு வேதத்தை உபதேசிக்கும் கோலத்தில் இருக்கிறார். இரணியனை அழித்தபோது உக்கிர நரசிம்மராக, பிரகலாதனுக்கு காட்சி தந்த சுவாமி, அவனுக்கு இங்கு குழந்தை வடிவில் காட்சி தந்தார். சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயதுக் குழந்தையாக பிரகலாதன் இருக்கிறார்.

ஆதிசேஷனும், அவரது மனைவியும் வேதநாராயணரை தாங்கிக் கொண்டிருக்கின்றனர். மேலே ஆதிசேஷன், கீழே அவரது மனைவி என இங்கு பத்து தலைகளுடன் நாகத்தை தரிசிக்கலாம். இந்த அமைப்பைக் காண்பது அரிது. நாக தோஷம், களத்திர தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இந்த பாம்புடன் காட்சியளிக்கும் பெருமாளை வழிபட தோஷம் நிவர்த்தியாகும்.

இராமானுஜர் இங்கு வந்தபோது, சுவாமி அவரிடம், “காவிரியில் நீராடி காவி உடுத்தி வா” என்றார். இராமானுஜரும் அவ்வாறே வந்தார். சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தன்று, இராமானுஜர் காவியுடை அணிந்து புறப்பாடாவார். மற்ற நாட்களில் இவருக்கு வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது.

பிரம்மா உபதேசம் பெற்ற தலமென்பதால், இக்கோயில் கல்வி வழிபாட்டிற்குரிய தலமாகவும் திகழ்கிறது. வேதநாராயணருக்கு திருவோணம், ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விசேஷ பூஜை நடக்கிறது. ஜாதகத்தில் குரு பலமின்றி இருந்தால், திருமணம் தள்ளிப்போகும். இந்த தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள், வேதநாராயணருக்கு துளசி மாலை அணிவித்து, சன்னதியில் 27 நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இந்த வழிபாட்டை வியாழன் அல்லது தோஷம் உள்ளவரின் ஜென்ம(பிறந்த) நட்சத்திரத்தன்று செய்வது விசேஷம்.

கோயில் முகப்பில் உள்ள தீப ஸ்தம்பத்தில் கம்பத்தடி ஆஞ்சநேயர் இருக்கிறார். இப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களுக்குள் ஏதேனும் பிரச்னை உண்டானால், இவர் முன்பாக பேசித் தீர்த்துக் கொள்கிறார்கள். இப்பகுதியில் யாராவது பொய் சொன்னாலோ, பிறரை நயவஞ்சமாக ஏமாற்றினாலோ, கம்பத்தடியார் முன் சத்தியம் செய்து தரும்படி கேட்கும் வழக்கமும் இருக்கிறது. 

பங்குனி உத்திரத்தன்று சுவாமி, வேதவல்லித்தாயார் சன்னதிக்கு எழுந்தருளி சேர்த்திக்காட்சி தருவார். ஆண்டாள், இராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பிள்ளை லோகாச்சாரியார்,  மணவாளமாமுனிகள் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர். மூலவர் விமானம் வேதவிமானம் எனப்படுகிறது.

திருவோணம், ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விசேஷ பூஜை நடக்கிறது. 

பிறப்பற்ற நிலை வேண்டியும், ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பு வேண்டியும் இவரை வழிபடலாம். திருமணத்தில் தடை உள்ளவர்கள், கல்வியறிவில் சிறப்பாக திகழ விரும்புவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.