டெல்லி:

என்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. காணொளி காட்சி மூலம் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து அவரது காவல் 27ந்தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது,  ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடு பெற முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் 305 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில்,  சட்டவிரோதப் பணபரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை சிதம்பரம் மீது குற்றச்சாட்டு சுமத்தி கைது செய்துள்ளது.

ஏற்கனவே சிபிஐ கைது செய்யப்பட்டதில், உச்சநீதி மன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உள்ள நிலையில், அமலாக்கத்துறை கைது வழக்கில் அவரது ஜாமின் மனு நிலுவையில் உள்ளது.

அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில்,  டெல்லியில் நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்திடம்  சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து, அவரது நீதிமன்ற காவல் 27ந்தேதி வரை நீடித்து  நீதிமன்றம் உத்தரவிட்டது.