சென்னை: திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தி வெளியிட்ட நிலையில், அவர்மீத டி.ஆர்.பாலு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கின் விசாரணைக்கு இன்று அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

ஆளும் திமுக மீதான ஊழல் புகார்களை வெளியிட்டு வருகிறார் அண்ணாமலை. முதல்கட்டமாக, கடந்த ஏப்ரல் மாதம், திமுகவை சேர்ந்த டி.ஆர்.பாலு உள்பட முக்கிய  12 நபர்களுடைய சொத்து பட்டியலை  வெளியிட்டிருந்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த பட்டியல் தொடர்பாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அண்ணா மலைக்கு திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால்  கண்டுகொள்ளாத அண்ணாமலை நீதிமன்றத்தில் பார்க்கலாம் என கூறியிருந்தார்.

இதையடுத்து, அண்ணாமலை மீது திமுகவின் பொருளாளர் டி.ஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். மேலும் இந்த ஊழல் பட்டியல் தொடர்பாக ஒவ்வொருவரும் தனித்தனியாக நீதிமன்றத்தை நாடப்போவதாக அறிவித்திருந்தினர்.

இந்த நிலையில், டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கு இன்று  சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வர உள்ளது. இந்த விசாரணையின்போது நேரில் ஆஜராக அண்ணாமலைக்கு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று அவர் ஆஜராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  டிவிட்டர்பதிவில் “திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு டி.ஆர் பாலு அவர்களின் சொத்து குவிப்பு பற்றிய தகவல்களை பிஜேபி சார்பாக DMK Filesல் வெளியிட்டது தொடர்பாக அவர் என்மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராக உள்ளேன்.”

“ஊழல் என்னும் கரையான் இத்தனை ஆண்டு காலம் நம் நாட்டை எப்படி அறிந்திருக்கிறது என்றும் அதனை அரசியலில் இருந்து முழுமையாக அப்புறப்படுத்த வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதையும் பொதுமக்கள் அறிவார்கள்”.

“நமது மாண்புமிகு நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, திமுகவினர் சொத்துகுவிப்பு பற்றிய அனைத்து உண்மைகளையும் மாண்புமிகு நீதிமன்றம் வாயிலாக மக்களுக்கு வெளிப்படுத்துவேன்” என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு காரணமாக சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.