ஏற்காடு மலைப்பாதை பகுதியில் உள்ள 60 அடி பாலம் அருகே ராட்சத பாறை உருண்டு விழுந்ததால், சில மணி நேரங்களுக்கு போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாளாக நேற்றிரவும் பரவலாக மழை பெய்தது. சேலம் மாநகர், காடையாம்பட்டி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது . இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இதன் காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே இன்று காலை ராட்சத பாறை ஒன்று உருண்டு சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனே அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

பின்னர் நெடுஞ்சாலைத்துறையினர், காவல்துறை மற்றும் வருவாய்துறையினனர் துரிதமாக செயல்பட்டு ஜே.சி.பி. எந்திரம் மூலம் பாறைகளை அப்புறப்படுத்தினர். இதையடுத்து ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் சென்று வருகின்றது.

சேலம் மாவட்டத்தில்எ மாவட்டத்தில் அதிகபட்சமாக கடையாம்பட்டியில் 32.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 24.5 மி.மீ, ஏற்காடு 26.6 மி.மீ, சங்ககிரி 4.1 மி.மீ, ஓமலூர் 4 மி.மீ, ஆத்தூர் 3.4 மி.மீ, மேட்டூர் 2.8 மி.மீ, கரியகோவில் 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 100.1 மி.மீ. மழை பெய்துள்ளது.