மேற்கு தொடர்ச்சி மழையடிவாரத்தில் அமைந்துள்ள ஆசிய கண்டத்திலேயே மண்ணால் உருவான2வது அணையான பவானி சாகர் அணை இன்று 65வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மழையடிவாரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய அணை பவானி சாகர் அணை. ஆசிய கண்டத்திலேயே மண்ணால் உருவான 2வது மண் அணை என்ற பெருமை இந்த பவானி சாகர் அணைக்கு உண்டு. இந்த அணை கடந்த 1948ம் ஆண்டு கட்டுமான பணி தொடங்கப்பட்டு 1954ல் கட்டி முடிக்கப்பட்டது. 120 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 15 அடிக்கு சேறும் சகதியும் உள்ளது. 105 அடியை தேக்கி வைக்கலாம்.

சுற்றிலும் பசுமையான மலைகள் இந்த மலையின் இடையே, மாயாறு மூலமும், நீலகிரி மலை பகுதியில் பெய்யும் மழை நீர் பவானி ஆற்றில் பாய்ந்து மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக பவானி சாகர் அணைக்கு வந்து சேருகிறது. இப்படி பிரதான 2 வழிகள் மூலம் பவானி சாகர் அணைக்கு வந்து செல்கிறது. இதன் நீர் பிடிப்பு பகுதி 1,627.5 சதுர மைல்கள் ஆகும். நீர் தேக்கத்தின் பரபரளவு 30 சதுர மைல்கள். இந்த பவானி சாகர் அணையின் பெயராலேயே பவானி சாகர் ஊர் பெயரும் வைக்கப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018-ம் ஆண்டு, 12 ஆண்டுகளுக்கு பிறகு பவானி சாகர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இப்போது தென்மேற்கு பருவ மழையால் அணைக்கு நீர்வரத்து கனிசமாக வந்துக்கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் 94.57 அடியாக அதிகரித்துள்ளது. தற்போது பாசனத்துக்காக வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. விவசாயிகள் விவசாய பணிகளையும் மகிழ்ச்சியுடன் தொடங்கி உள்ளனர்.

பவானிசாகர் அணை கட்டப்பட்டு 65வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி ஈரோடு மாவட்ட விவசாயிகள் பலர் அணையோரம் உள்ள நீர் தேக்கப்பகுதிகளுக்கு சென்று பூஜை செய்து வழிபட்டு வருகிறார்கள். சில விவசாயிகள், பூஜைக்கு பின்னர் அன்னதானமும் வழங்கினர்.