சென்னை:  மாணவி பிரியா மரணம் குறித்து வெளிப்படைத்தன்மையோடு விசாரணை நடைபெறுகிறது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கால்பந்து விராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டைப் பிரிவின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர்  மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, மாணவி பிரியா மரணம் வேதனை அளிக்கிறது என்று கூறியவர், மாணவி விஷயத்தில் நடைபெற்றது என்பது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது,  பிரியா மரணம் குறித்து, உடனடியாக மருத்துவ விசாரணக்காக ஒரு குழு அமைத்தோம். குழுவினர் விசாரணை நடத்தி, மருத்துவர்களின் கவனக்குறைவுதான் இதற்கு காரணம் என்று அறிக்கை அளித்தனர். அன்றிரவு விசாரணை அறிக்கை கிடைத்தது. அதற்கு அடுத்தநாளே பத்திரிகையாளர்களை சந்தித்து, கவனக்குறைவால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதால், அந்த இரண்டு மருத்துவர்களும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்றுகூறி, ஒருவரை தூத்துக்குடிக்கும், மற்றொருவரை நெல்லைக்கும் இடமாற்றம் செய்தோம் என்றார்.

மேலும், தான் அவர் இறப்பதற்கு முந்தைய நாள்,  அந்த குழந்தையை  மருத்துவமனையில் நேரில் சென்று பார்த்து நீண்ட நேரம் உரையாடினேன். மாணவியின் பெற்றோரிடமும் பேசி கொண்டிருந்தேன். அப்போது மாணவிக்கு உடல்நலம் தேறியவுடன் அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவரது பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அதனை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தேன். மேலும், அவருக்கு அதிநவீன கால் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாகவும் கூறினார். ஆனால், துரதிருஷ்டவசமாக,   அன்று இரவே, அவருக்கு  இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, இதயத்திற்கும், சிறுநீரகத்திற்கும் இடையிலான இரத்த ஓட்டம் முழுமையாக நின்றுவிட்டதன் விளைவாக பிரியா நம்மை விட்டு பிரிந்தார்.

இநத தகவல்  கிடைத்தவுடனே வந்து, மருத்துவமனையில் அந்த குழந்தையைப் பார்த்தேன். அவரது தந்தை உடற்கூறாய்வு வேண்டாம் என்று கூறினார். உடற்கூறாய்வு செய்தால்தான், மாணவிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தவறு செய்திருந்தால், அதை உறுதிப்படுத்த முடியும். எனவே உடற்கூறாய்வு செய்வது நல்லது என்று நான்தான் மாணவியின் தாய், தந்தை மற்றும் 3 சகோதரர்களையும் சமாதானப்படுத்தினேன் என்று தெரிவித்ததுடன்,  மாணவி பிரியா மரணம் குறித்து வெளிப்படைத்தன்மையோடு விசாரணை நடைபெறுகிறது. இந்த கவனக்குறைவுக்கு யாரெல்லாம் காரணமானவர்களோ, அவர்களை எல்லாம் கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

கால்பந்து வீராங்கனை மரணம்: முன்ஜாமின் கோரி மருத்துவர்கள் மனு…