டில்லி:

மிழிலும் உச்சநீதி மன்ற தீர்ப்புகள் மொழி பெயர்த்து வெளியிட வலியுறுத்தி  தலைமை நீதிபதியை சந்தித்த திமுக எம்.பி  டி.ஆர்.பாலுவிடம்,  திமுகவின் கோரிக்கையை பரிசீலித்து உரிய முடிவு எடுப்பதாக உச்சநீதி மன்ற  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உறுதி அளித்துள்ளதாக திமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து, திமுக தலைமை வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை உடனுக்குடன் ஏககாலத்தில் மொழி பெயர்ப்பதற்கான தாய்மொழிகளின் உத்தேச முதல் பட்டியலிலேயே தமிழையும் சேர்க்க வேண்டும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பில் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேற்று (12.7.2019) உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தினார்.

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பில் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் தெரிவித்த கருத்துக்களைக் கூர்மையாகக் கேட்டுக் கொண்ட இந்தியாவின் தலைமை நீதிபதி அவர்கள், உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளை ஏக காலத்தில் மொழி பெயர்த்து வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் தாய்மொழிகளின் முதல் பட்டியலிலேயே தமிழையும் சேர்ப்பது குறித்த கோரிக்கையை பரிசீலித்து, விரைவில் நல்ல முடிவை எடுப்பதற்கு கனிவுடன் ஒப்புக் கொண்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.