சென்னை: அதிமுக அரசை கவிழ்க்க, திமுக தலைவர் ஸ்டாலின் எந்தவகையிலும் முயல மாட்டார் என்றும், முதலமைச்சராக பதவியேற்க தனது முறை வரும்வரை காத்திருப்பார் என்றும் திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி தெரிவித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, “அதிமுக அரசின் சில எம்எல்ஏக்களை வளைத்து, அந்த அரசை கவிழ்க்க திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி செய்வதாக செய்திகள் வருகின்றன. ஆனால், அப்படி அரசுகளை கவிழ்ப்பது மற்றும் கலைப்பதெல்லாம் அதிமுகவின் கலாச்சாரம்.

கடந்த 1972ம் ஆண்டு அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் திமுக அரசைக் கவிழ்க்க முயன்றார். பின்னர் 1988ம் ஆண்டு, ஜானகியின் அரசை ஜெயலலிதா கவிழ்த்தார். பின்னர், அதே ஜெயலலிதா திமுக அரசை 1991ம் ஆண்டு கலைக்க வைத்தார்.

ஆனால், திமுக எந்த காலத்திலும் எந்த அரசையும் கவிழ்க்க முயன்றதேயில்லை. கலைஞர் கருணாநிதியின் வழியைப் பின்பற்றி நடக்கும் ஸ்டாலினுக்கு அப்படியான எந்த எண்ணமும் கிடையாது” என்று தனது தலையங்கத்தில் தெரிவித்துள்ளது முரசொலி.