சென்னை

நாளை தமிழக சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

தமிழக சட்டசபையின் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்குவது ஒவ்வொரு ஆண்டும் மரபாக உள்ளது.  தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 10 மணிக்கு உரையாற்றுகிறார். இதையொட்டி சில நாட்களுக்கு முன்பு சபாநாயகர் அப்பாவு ராஜ்பவனுக்கு நேரில் சென்று, ஆளுநர் ஆர்.என்.ரவியை உரையாற்ற வரும்படி முறைப்படி அழைப்பு விடுத்திருந்தார்.

ஆளுநர் ஆர் என் ரவி உரை நிகழ்த்துவதற்காக காலை 9.57 மணிக்குச் சட்டசபை செயலகத்திற்கு வருவார். ஆளுநரை நுழைவு வாயிலில் சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள். ஆளுநருக்குச் சிவப்பு கம்பள விரிப்பு மரியாதையுடன் காவல்துறை அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்படுகிறது.

ஆளுநர் சபாநாயகர் இருக்கைக்கு ஆளுநர் வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். பிறகு ஆளுநர் தன்னுடைய உரையை ஆங்கிலத்தில் வாசிப்பார். அவர் உரை நிகழ்த்தி முடித்ததும், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தைச் சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். தேசிய கீதத்துடன் சபை நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் ஆளுநரை அதே மரியாதையுடன் சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளர் வழியனுப்பி வைப்பார்கள்.

தொடர்ந்து சபாநாயகர் அறையில் அவர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் கூடி ஆளுநர் உரை மீதான விவாதங்களுக்காக எத்தனை நாட்கள் அவையை நடத்துவது என்பது பற்றி அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

தமிழகத்தில் தற்போது நிலவும் பரபரப்பான அரசியல் சூழ் நிலையில், இந்த கூட்டத்தொடர் மிகச் சூடான விவாதங்களுடனும், கருத்து மோதல்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

சென்ற ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தியபோது, தமிழக அரசு தயாரித்து அளித்திருந்த உரையில் சில வாசகங்களைத் தவிர்த்தும், சிலவற்றைச் சேர்த்தும் அவர் வாசித்தார். ஆயினும் அவை நீக்கப்பட்டு, அரசு கொடுத்திருந்த உரையே பதிவு செய்யப்பட்டது.