திருநெல்வேலி

நாளை நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களாக வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்தது. இவ்வாறு இடைவிடாது பெய்த கன மழை காரணமாக இந்த 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை அளவு பதிவாகி இருப்பதால் இரு மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இவ்விரு மாவட்டங்களிலும் சாலைகள், வீடுகள், கோவில்கள், பஸ் நிலையங்கள் என எங்கு பார்த்தாலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த வெள்ளத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.  இன்னும் வெள்ள பாதிப்பு தொடரும் நிலையில் நாளை நெல்லை,தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.