சென்னை

நாளை நடைபெறும் பாமக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில்  பாஜக கூட்டணி குறித்து முடிவு  எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீட்டில் முனைப்புக் காட்டி வருகின்றன. இதில் தமிழக பாஜகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காண்பித்து வருகிறது. தேர்தலில் வலுவான கூட்டணியை அமைக்கத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறது.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு உள்ளிட்டவை கைகோர்த்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கூட்டணியில் பா.ம.க.வுக்கு எட்டு முதல் பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே கூட்டணி குறித்து முடிவு எடுக்க பா.ம.க. மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை நாளை அவசரமாகக் கூட்டுகிறது.