சென்னை

நாளை வங்கக்கடலை ஒட்டிய இலங்கைக்  கடலோரம் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரும். இதன் காரணமாக இன்று ராமநாதபுரம் ,தூத்துக்குடி, நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் , விருதுநகர், மதுரை, சிவகங்கை ,புதுக்கோட்டை, கடலூர், திருச்சி ,திருநெல்வேலி ,கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை தென்காசி, திருநெல்வேலி ,ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழையும்,   மதுரை, விருதுநகர் ,சிவகங்கை ,கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.வருகின்ற 31ம் தேதி முதல் 2ம் தேதி வரை தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்

சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இன்று தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் மன்னார் வளைகுடாப் பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்,”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.