சென்னை: தொடரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளால், திருவாரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளையும் (27ந்தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று  நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. திருச்செந்தூர் கோவிலுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது இதையடுத்து, சென்னை உள்பட  27 மாவட்டங்களில்  இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை தீவிரமடையும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும்,  தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக,   திருவாரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.