சென்னை

நாளை நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக – மதிமுக இடையே 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பிரசாரம் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிவிட்டன.  திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளையும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியையும் ஒதுக்கி உறுதியாக்கிவிட்டது. மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களும், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை காலை 11 மணிக்குத் தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.க.-ம.தி.மு.க. இடையே அண்ணா அறிவாலயத்தில் காலை 11 மணிக்கு மேல் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ம.தி.மு.க.வினர் ஒரு மக்களவையும், ஒரு மாநிலங்களவையும் கேட்டு வலியுறுத்துவதாகவும், ஆனால் தி.மு.க.வினர் மக்களவை தொகுதி கொடுக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே பேச்சுவார்த்தை நீடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி சின்னம் இல்லாமல் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதில் ம.தி.மு.க.வினர் உறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.