இன்று தை அமாவாசை. இன்றைய தினம் முன்னோர்களை வணங்கி ஆசி பெறுவது நல்லது.   தை அமாவாசையானது இன்று (பிப்ரவரி 9ம் தேதி) காலை 8.50 மணிக்கு துவங்கி பிப்ரவரி 10ம் தேதி அதிகாலை 4.28 மணிக்கு முடிவடைகிறது.
இன்றைய தை அமாவாசை  சிறப்புகள் குறித்தும், அதன் பலா பலன்கள்  குறித்து பிரபல ஜோதிடரும், எழுத்தாளருமான வேதா கோபாலன் பத்திரிகை டாட் காம் நேயர்களுக்கு வீடியோ வடிவில் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
 தை அமாவாசை என்றால் என்ன? ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும் தினம் மிகவும் முக்கியமானது. அதிலும் ஆடி, புரட்டாசி, தை மாதம் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமானது. ஆடி அமாவாசை அன்று பித்ருக்கள் பித்ரு லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கிளம்புவதாக ஐதீகம். மகாளய அமாவாசை என்று அழைக்கப்படும் புரட்டாசி அமாவாசை பித்ருக்கள் பூலோகம் வந்தடைந்து, மகாளய பட்ச காலத்தில் தங்கி இருந்து அருள் புரிவார்கள். தை அமாவாசை அன்று பித்ருக்கள் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி பிதுர் லோகம் திரும்புவதாக ஐதீகம்.
இன்று அமாவாசை திதியானது காலையிலேயே துவங்கி விடுவதால் காலையிலேயே நீராடி முன்னோர்களை வணங்குவது நல்லது. அமாவாசை நாளன்று நண்பகல் 12 மணிக்கு முன்பு திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டும், அதிகாலை நான்கு மணியில் இருந்து கொடுக்க ஆரம்பித்து விடலாம். சூரிய உதயம் முன்பு பிரம்ம முகூர்த்தம் இருப்பதால் சூரியன் வந்தபிறகு கொடுக்க வேண்டும் என்று கிடையாது. பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது புண்ணியமாகும். ராகு காலம், எம கண்ட நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் தர்ப்பணம் கொடுக்கலாம். அல்லது நல்ல நேரமான காலை 9:30 மணி முதல் 10: 30 மணிக்குள் திதி கொடுக்கலாம்.
பொதுவாக அமாவாசை தினங்களிலும்  மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.  அதிலும், ஆடி அமாவாசை, தை அமாவாசையான தர்ப்பணம் கொடுப்பதற்கு மிகுவும் சிறந்த நாளாக கருதப்படுகிறது.  அப்படி தர்ப்பணம் கொடுப்பவர்கள் நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கொடுப்பது மிகவும் விசேஷமானது. பொதுவாக தர்ப்பணம், சிரார்த்தம் என இரண்டு உண்டு. இதில் வித்தியாசமும் உண்டு.

தர்ப்பணம்  அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்துச் செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும். இது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யலாம். தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு படைத்து விட்டு, சாப்பிடுவது, பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது உள்ளிட்டவை தர்ப்பணத்தில் அடங்கும்.

தாய், தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

சிரார்த்தம் : ஒருவர் இறந்தால் அவரை நினைத்து ஒவ்வொரு ஆண்டும், அவர் இறந்த அதே திதியில் நாம் வீட்டில் அல்லது கோயிலுக்கு சென்று செய்யும் வழிபாடு சிரார்த்தம் எனப்படும். இதில் பிண்டம் வைத்து வழிபடுவது சிறந்தது. குறிப்பாக அவர் இறந்த நாளின்போது வரும் திதியில் செய்வது சிரார்த்தம் என்று சாஸ்திரம் சொல்லுகிறது.