சென்னை

ன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்படுகின்றன. 

கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு, அரையாண்டு தேர்வு தொடங்கப்பட்டது. தேர்வுகள் முதலில் 7-ந்தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெய்த கனமழையால் தள்ளிவைக்கப்பட்டு பின்னர் நடத்தி முடிக்கப்பட்டன.

கடந்த 18-ந்தேதி தென்மாவட்டங்களில் பெய்த மழை வெள்ளத்தால், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு மட்டும் சில பாடங்களுக்குத் தேர்வுகள் நடத்த முடியாமல் போனது.

ஆயினும் அரையாண்டு விடுமுறையும் நெருங்கியதால், தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 23-ந்தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. மேலும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது.

அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று  பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

இதுவரை வரலாறு காணாத வெள்ளம் பாதித்த திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு வருகிற 4 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை விடுபட்ட அரையாண்டு தேர்வுகளை நடத்த அந்தந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது.