சென்னை

ன்று தமிழகம் முழுவதும் 43.051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது..

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் நடைபெற உள்ளது. இங்கு 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் இந்த மையங்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இந்த தடுப்பு மருந்து கொடுக்கும் முன்பு சோப்பு போட்டு கை கழுவுவது, சானிடைசர் உபயோகப்படுத்துவது கட்டாயமாகும்.

ஓரிரு நாட்களுக்கு முன்பு தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். குறிப்பாக அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியம்.

சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும். இன்று அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கத் தனியார் மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சொட்டு மருந்து வழங்கும் பணிக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகிறது.  இந்த மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

குழந்தைகளின் வசதிக்காக இன்று முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச்சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடமாடும் குழுக்கள் மூலமாகத் தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.