திண்டிவனம்

பாஜக கூட்டணியில் பாமக பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து இன்று அறிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.  இதில் தி.மு.க. கூட்டணி கட்சி தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்து ஒவ்வொரு தொகுதிக்குமான வேட்பாளர்கள் பற்றி கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக தேசிய ஜனநாயக கூட்டணிக்குள், பா.ம.க.வை கொண்டுவர தமிழக பா.ஜ. க. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அ.தி.மு.க.வும், பா.ம.க.வை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. நேற்று முன் தினம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் சென்னையில் சந்தித்தார்.

நேற்று மாலை நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. உயர்நிலை குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அனைத்து அரசியல் சூழல்களை கருத்தில் கொண்டு பார்த்தால், பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதே சாலசிறந்தது’ என்றும் அதற்கான, காரணங்களையும் விரிவாக எடுத்துக்கூறினார்.

அவர் கருத்தை முழு மனதாக ஏற்ற நிர்வாகிகள் உற்சாகத்துடன் ஆதரித்தனர். இந்தக் கூட்டணி மற்றும் தொகுதி எண்ணிக்கை குறித்த முழு விவரங்களையும் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.