தூத்துக்குடி

ன்று பிரதமர் மோடி தூத்துக்குடி மற்றும் நெல்லையில் பல நிகழ்சிக்களில் கலந்துக் கொள்கிறார்/

நேற்று முதல் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இரவில் மதுரையில் தங்கினார். இன்று  காலை 8.40 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்குப் புறப்படும் பிரதமர் மோடி காலை 9.30 மணிக்குத் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.

பிரதமர் அங்கிருந்து காரில் சென்று அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அங்குப் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு, விழா மேடை தயார் நிலையில் உள்ளது. அவர் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திர மயமாக்கல், ரூ.124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டுவதுடன் 10 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டு உள்ள 75 கலங்கரை விளக்கம், ரூ.1,477 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை, நாடு முழுவதும் ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

விழாவை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் நெல்லைக்கு வருகிறார். ஹெலிகாப்டர் பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதான ஹெலிபேடு தளத்தில் தரையிறங்குகிறது.  பிறகு குண்டு துளைக்காத கார் மூலம் பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெறும் பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

நெல்லை, தூத்துக்குடியில் பிரதமர் வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  பாஜகவினர் தூத்துக்குடி, நெல்லைக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக பல்வேறு இடங்களில் கொடிக்கம்பங்கள், வரவேற்பு பேனர்கள், தோரணங்கள் வைத்துள்ளனர்.