சென்னை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று 10 நாள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக ஸ்பெயின் கிளம்புகிறார்.

 

தமிழகம் தொழில் வளர்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. இதையொட்டி அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. இதில் குறிப்பாக, வெளிநாட்டில் உள்ள முதலீடுகளைத் தமிழகத்துக்கு ஈர்க்கவும், அதன் மூலம் தமிழகத்தில் வேலை வாய்ப்பை பெருக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கடந்த 7, 8 ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்ற போது, ரூ.6 லட்சத்து 64 ஆயிரம் கோடிக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் 27 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்குச் செல்ல உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சமீபத்தில் தெரிவித்ததையடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இன்ற் இரவு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு புறப்படுகிறார்.

முதல்வர் இரவு 9.45 மணிக்கு விமானம் மூலம் துபாய் புறப்பட்டு பிறகு அங்கிருந்து சுவீடனுக்கு சென்று பிறகு ஸ்பெயினுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அவர் அங்கு பல்வேறு நாட்டு தொழில் அதிபர்கள், வெளிநாட்டு அரசு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரை அவர் சந்தித்துப் பேச உள்ளார்.

வரும் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி முதல்வர் தனது வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்புகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினின். இந்த 10 நாட்கள் சுற்றுப்பயணத்தில், தமிழகத்துக்கு மேலும் பல வெளிநாட்டு முதலீடுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.