சென்னை: இஸ்லாமியர்களின் ஈகைத்திருநாளை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பல பகுதிகளில் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது.

மனிதநேயத்தை வலியுறுத்தும் திருநாளான பக்ரீத் திருநாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.  உலகில் அமைதியும், சகோதரத்துவமும் தழைக்கும் படி அன்பு, நல்லிணக்கம், ஈகை, மாற்றுத்திறனாளிகள் மீதான அக்கறை உள்ளிட்டவற்றையும் இந்த திருநாள் உணர்த்துகிறது.

இத்திருநாள்  ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்புடன் இறைபக்தியையும் கடந்து இல்லாதவர்களுக்கு கொடுத்து, அண்டை வீட்டாருடன் நல்லுறவை பாராட்ட வேண்டும் என்பதையும் சொல்கிறது.

இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகையை சிறப்பு தொழுகை, புத்தாடை, இனிப்பு, பிரியாணி என இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

சென்னையில் பிரபலமான பகுதிகளான மண்ணடி, வண்ணாரப்பேட்டை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தாசமக்கான் உள்பட பல பகுதிகளில் உள்ள மசூதிகளில் இன்று காலை முதலே சிறப்பு தொழுகை நடைபெற்று வருகிறது.

கோவை ஒப்பணக்கார வீதியிலுள்ள, புகழ்பெற்ற அத்தர்ஜமாத் பள்ளிவாசலில், பக்ரீத் பண்டிகையையொட்டி, சிறப்பு தொழுகை நடைபெறுகிறது .இமாம் இப்ராஹிம் பார்கவி தலைமையில், காலை 7:30 மணிக்கு சிறப்பு தொழுகை நடக்கிறது. இதில் இஸ்லாமிய மக்கள் திரளாக பங்கேற்கின்றனர்.

மதுரை மகபூப்பாளையம் பகுதியில் தவ்ஹித் ஜமாத் சார்பில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு தொழுகையை தொடர்ந்து, இஸ்லாமியர் தங்களது வீடுகளில் சமைத்த பிரியாணி உணவு வகைகளை, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பங்கிட்டு மகிழ்வர்.கோவையிலுள்ள அனைத்து பள்ளிவாசல்கள், ஜமாத்கள், கபர்ஸ்தான்களில், இன்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது.

கொரோனா காரணமாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பத்திரிகை டாட் காம் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமை கொள்கிறது.