சென்னை

ந்த ஆண்டு மழை அதிகம் பெய்து வருவதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த வருடம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை இதுவரை தமிழகத்துக்கு 155.7 மி.மீ மழை கொடுத்துள்ளது. வழக்கத்தை விட 78% அதிகம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் தென்மேற்கு பருவ மழையின் தாக்கத்தால் ஜூலை மாதத்தில் மழைப்பொழிவு சிறப்பாகவே உள்ளது. இதனால் சென்னையின் நீராதார ஏரிகளில் கடந்தாண்டு இருந்ததை விட தற்போது இரு மடங்கு நீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியின் கொள்ளளவு 3 ஆயிரத்து 231 கன அடியாக உள்ள நிலையில் தற்போது அதில் 1,143 கன அடி நீர் உள்ளது. சோழவரம் ஏரியின் கொள்ளளவு 1,081 கன அடியாக இருக்கும் நிலையில் 599 கன அடி நீர் இருப்பு உள்ளது. செங்குன்றம் ஏரியின் கொள்ளளவு 3,300 கன அடியாக உள்ள நிலையில் தற்போது 2,659 கனஅடி நீர் இருப்பு உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி 3,645 கனஅடி நீரை கொள்ளக் கூடிய நிலையில் அதில் தற்போது 2,632 கனஅடி நீர் இருப்பு உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட தேர்வாய் கண்டிகை கண்ணன் கோட்டை ஏரியில் 436 கனஅடி நீர் உள்ளது.

எனவே சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரிகளில் 7.5 டிஎம்சி நீர் உள்ள நிலையில் அது சென்னைக்கு வரும் ஜனவரி மாதம் வரை போதுமானதாக இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில் சென்னை மக்கள் குடிநீர் தட்டுப்பாடு குறித்த அச்சமின்றி இருக்கலாம் எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.