சென்னை

தொடர் மழை காரணமாக இன்று தமிழகத்தின் 7 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என தெரிவித்து இருந்தது.

அவ்வாறு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாகக் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று  ஒருநாள் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர் மழை காரணமாக இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.