சென்னை

சென்னையில் வெள்ளம் வடியாத பகுதிகளில் இன்று 4 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிக்ஜம் புயல் கனமழை பெய்ததால் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தற்போது மீட்பு மற்றும் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். தற்போதுவரை நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் பாதிக்கப்பட்டு பள்ளிகளைச் சீரமைக்க ரூ.1 கோடியை பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கியது.

மழை பாதிப்பு காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குக் கடந்த 4-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களும் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன.

11 ஆம் தேதி அன்று மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் 11-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 7 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பின்னர் நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆயினும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு சில பள்ளிகள் மட்டும் நேற்று திறக்கப்படவில்லை.

இன்று சென்னையில் உள்ள 4 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி, அறிஞர் அண்ணா ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, சரோஜினி வரதப்பன் மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்ன போரூர் மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளுக்குத் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதால் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.