சென்னை

ன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திமுக வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார். 

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் அட்டவணைப்படி மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல் கட்டத்தில் தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது.

இன்று முதல் 27 ஆம் தேதி வரை இதற்கான வேட்புமனு தாக்கல் நடக்கிறது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 3 கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இவற்றில் தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை தொகுதிப் பங்கீடு அனைத்தும் நிறைவடைந்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. அ.தி.மு.க. வுக்கு பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை முடியவில்லை.

பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ள பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த தொகுதி என்று அறிவிக்கவில்லை. மற்ற கட்சிகளுக்கும் விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் வடிவமைத்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையையும் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட உள்ளார்.

இம்முறை தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய பல தேர்தல்களில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையே கதாநாயகனாக இருந்துள்ளதால், இந்த தேர்தலிலும் அப்படி ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.