கோவை

ன்று கோவையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். 

தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் பிரம்மாண்ட சிலை கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக குறிச்சிக்குளம் ஏரிக்கரை அருகே 25 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை 25 அடி உயரமும், 15 அடி அகலமும், 20 அடி நீளமும், 2.5 டன் எடையும் கொண்டது ஆகும்.

இந்த கம்பீரமான திருவள்ளுவர் சிலை அவர் எழுதிய 1,330 திருக்குறளைப் போற்றும் வகையில், 1,330 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் 247 எழுத்துக்களையும் மீண்டும் மீண்டும் உபயோகித்துச் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 50 கோடி ரூபாய் செலவில் குறிச்சி குளம் உட்படக் கோவையின் ஏழு பழமையான ஏரிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏரி முகப்பு மேம்படுத்தப்பட்டு, தமிழர் கலாச்சாரம் மற்றும் பண்டிகைகளைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள் கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன.

இன்று கோவையின் புதிய அடையாளமாகப் போகும் இந்த சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.முதல்வர்  மேலும் கோவை மாநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் திறந்து வைக்க உள்ளார்.