சென்னை

மிழக அரசு போக்குவரத்துக் கழகம் கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பயணிகளின் வசதிக்காகத் திருவண்ணாமலை தீப திருநாள் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்

அதில்,

“திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற தீப திருநாள் 26/11/2023 அன்றும் மற்றும் 27/11/2023 அன்று பௌர்ணமி தினமானதாலும், தீபத்தை காணவும் மற்றும் கிரிவலம் செல்லவும் பல லட்சம் பொது மக்கள் திருவண்ணாமலைக்கு சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, திருவண்ணாமலைக்கு தன் சொந்த வாகனங்களில் செல்லும் போது அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனை தவிர்க்கும் பொருட்டு சொகுசாக பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் வருகின்ற 25/11/2023 (சனி), 26/11/2023 (ஞாயிறு) மற்றும் 27/11/2023 (திங்கள்) ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கும் ஐம்பது எண்ணிக்கையிலான குளிர் சாதனம் உள்ள இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இப்பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலை சென்று வர சிறப்பு பேருந்துகள் 24/11/2023 முதல் 26/11/2023 வரை இயக்கப்பட உள்ளது. எனவே, பக்தர்கள் www.tnstc.in மற்றும் tnstc mobile app மூலம் முன்பதிவு செய்து தங்கள் பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”

என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.