சென்னை: குரூப் 4 தேர்வு தேதி இன்று மாலை வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு அரசில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம்  நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, பல்வேறு பணிகளுக்கு தகுந்தவாறு,குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.  கடந்த சில ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், தற்போது திமுக அரசு, காலி அரசுப்பணியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ் தேர்வுகளை வெளியிட்டு வருகிறது.

அதன்படி,  தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் -1 பிரிவில்  நிரப்பப்படும்.

குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணிகள் இடம்பெறுகின்றன.

10ஆம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்ட குரூப் -4 தேர்வில் வி.ஏ.ஓ உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டு குரூப் – 4 தேர்வு எப்போது நடைபெறும் அரசுப் பணியை லட்சியமாகக் கொண்ட இளைஞர்கள் காத்திருந்தனர்.

குரூப் -4 தேர்வுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் போட்டித்தேர்வுகள் ஜூன் மாதம் நடத்தபடும் என்று இந்த ஆண்டுக் கான வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு மொத்தம் 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளன. இந்த நிலையில், குரூப் – 4 தேதி இன்று மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தேர்வாணைய தலைவர் கா. பாலசந்திரன் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார்.