சென்னை: குரூப்-1 தேர்வு 2021 ஜனவரி 3ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழக அரசின் ஆட்சிப் பணியில் குரூப்-1 தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி இன்று அறிவித்துள்ளது. அதாவது 2021ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டு உள்ளது.

அதன்படி, 2021ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி குரூப் 1 தேர்வு நடைபெறும். தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குனர்கள் மற்றும் உதவிக் கண்காணிப்பாளர் பணிக்கான தேர்வு தேதி 2021ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறும். ஜனவரி 10 முற்பகல் மட்டும் தேர்வு நடத்தப்படும்.

 

இதேபோன்று ஜனவரி மாதம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர், உதவி வேளாண் அதிகாரி, உதவி தோட்டக்கலை அதிகாரி ஆகிய பணிகளுக்கான தேர்வு நடக்கும். குரூப்-2, 2A தேர்வுகளுக்கான அறிவிப்பு 2021 மே மாதத்தில் வெளியாகும்.

குரூப்-3 தேர்வுக்கு ஜூலையிலும், குரூப்-4 தேர்வுக்கு செப்டம்பரிலும் அறிவிப்பு வெளியாகும். ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதேபோன்று மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு 2021ம் ஆண்டு நவம்பரில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.