சென்னை

மிழக மின் வாரியம் 3 கிலோ வாட் வரை சூரியசக்தி மின் உற்பத்திக்கு ஒப்புதல் தேவை இல்லை என  அறிவித்துள்ளது.

நேற்று தமிழக மின் வாரியம் ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,

”தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் மின்சார துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அடிப்படையிலான சூரிய மின் உற்பத்தியை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

தமிழகத்தில் தற்போது, சூரிய மின் உற்பத்தியின் நிறுவப்பட்ட திறன் 7 ஆயிரத்து 372 மெகாவாட்டாக உள்ளது.  இதில் 526 மெகாவாட் கட்டிட மேல் கூரையில் பொருத்தப்படும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களாக அமைக்கப்பட்டு உள்ளது. 

தமிழகத்தில் கட்டிட மேல் கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்து சூரிய மின் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், விண்ணப்ப செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. தாழ் வழுத்த மின் இணைப்புகளில் மேற்கூரை சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான விண்ணப்பங்கள் தற்போது இணையதளம் வாயிலாகச் செயலாக்கப்படுகின்றன. 

இத்தகைய செயல் முறையை மேலும் விரைவுபடுத்த, 3 கிலோ வாட் வரையிலான சூரிய மின் சக்தி திறன் அல்லது மின் இணைப்பில் அனுமதிக்கப்பட்ட மின் திறன் இரண்டில் எது குறைவோ, அதற்கு ”சாத்தியக்கூறு ஒப்புதல்” பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. 

எனவே தங்கள் மின் இணைப்பு உள்ள கட்டிடங்களின் மேல் கூரையில் சூரிய மின் நிலையங்கள் நிறுவ விரும்பும் நுகர்வோர் விண்ணப்பத்தை இணையதளம் வாயிலாகப் பதிவு செய்து இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.”

என்று கூறப்பட்டுள்ளது.