ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை இறுதியாக எச்சரிகை விடுத்துள்ளது. ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் பணிபுரிந்தவை காலி இடங்களாக அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

teachers

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பாததை தொடர்ந்து உச்சநீதிமன்றம் கண்டனத்தை தெரிவித்ததுடன், உடனடியாக பணிக்கு செல்லவும் அறிவுறுத்தியது.

இருப்பினும் தொடர்ந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு இறுதி எச்சரிக்கையை ஆசிரியர்களுக்கு விடுத்துள்ளது. அதில் நாளை( செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு பணிக்கு திரும்பும் ஆசிரியர்கள் விரும்பும் பகுதிகளுக்கு இடமாறுதல் வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. மேலும், பணிக்கு திரும்பாத ஆசியர்களின் இடங்கள் காலிபணியிடங்களாக அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலமாக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு ஆசிரியர்களை எச்சரித்துள்ளது. இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர், முதன்மை கல்வி அலுவர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ”நாளை பணியில் சேர விரும்பும் ஆசிரியர்கள் தங்கள் அலுவலர்களிடம் எஸ்.எம்.எஸ், வாட்ஸ் ஆப், தொலைபேசி அல்லது நேரிலோ தகவல் தெரிவித்துவிட்டு உடனடியாக பணியில் சேரலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான நெறிமுறைகளை குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், ” பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்திற்கு அதுசார்ந்த கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். பள்ளிக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பணி ஆணையில் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் மாதம் ரூ. 10,000 தொகுப்பூதியம் மட்டுமே வழங்க முடியும். தற்காலிக பணியாணையை வைத்து அரசின் வேலைவாய்ப்புக்கு எந்த உரிமையும் கோர முடியாது” என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களில் 5 சதவீதம் பேர் பணிக்கு திரும்பியுள்ளதாகவும், அவர்கள் கோரிக்கையை ஏற்று உடனுக்குடன் பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டு வருவதாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.