சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரின்  3வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இன்று கேள்வி நேரத்தின்போது,  உறுப்பினர்கள் கேட்கும்  கேள்விகளுக்கு  அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் சட்டப்பேரவை கூட்ட தொடரில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுக சாமியின் ஆணையம் அளித்த அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார். இதேபோல தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் குறித்து குழு அளித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 17ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் மொத்தம் மூன்று நாட்கள் நடத்தப்பட்டு இன்றுடன் நிறைவடைகிறது. இன்றைய கூட்டத்தொடரில் சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் தமிழ்நாடு (திருத்த) சட்ட முன்வடிவை அறிமுகம் செய்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். 2022-2023ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (முதல்) மீது விவாதம், பதிலுரை மற்றும் வாக்கெடுப்பு நடைப்பெறவுள்ளது.