சென்னை

லங்கை கடற்படை தாக்குதலில் மரணம் அடைந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோடைப்பட்டினத்தில் இருந்து கடந்த 18 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டுள்ளனர்.  இந்த தாக்குதலின் போகு கடற்படை கப்பல் மோதி மூவர் கடலில் விழுந்துள்ளனர்.  இவர்களில் ராஜ்கிரண் என்னும் மீனவர் உயிர் இழந்துள்ளார்.  மீதமுள்ள இருவரை இலங்கை கடற்படையினர் பிடித்துமே சென்றுள்ளார்.

இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 18/10/2021 அன்று IND-TN- 08- MM- 201 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மூன்று மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர் என்றும், அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டதாகவும், மீனவர்கள் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியதாகவும் தெரிய வந்ததையடுத்து, அவர்களை மீட்டுத் தருமாறு தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார். 

மேற்படி மூன்று மீனவர்களில் சுகந்தன் த/பெ. சுதாகரன் மற்றும் சேவியர் (வயது 38), த/பெ. அருளானந்தம் ஆகிய இரு மீனவர்கள் இலங்கையின் கடற்படை வசம் இருந்த நிலையில், மற்றொரு மீனவரான ராஜ்கிரண் (வயது 28), த/பெ.ராசு என்பவர் உயிரிழந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல் வர பெற்றது.

இந்நிகழ்வில் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் என்பவரது குடும்பத்தாருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.