கொடைக்கானல்

பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் வீடுகள் கட்டுவமான பணிகளைத் தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. 

பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் சொந்தமாகப் பங்களா கட்டி வந்தனர். கொடைக்கானல் நகராட்சியிடமிருந்து  இந்த பங்களா கட்டுவதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜுனைத் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இது குறித்து பொது நல மனுத் தாக்கல் செய்தார்.

மனுவில்,

”கொடைக்கானலில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் கட்டடம் கட்டுவதால் கொடைக்கானலில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அருகில் உள்ள வீடுகளும் இடிவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளது. மேலும் கனரக இயந்திரங்கள் மூலமாக மலையில் உள்ள பாறைகளை அகற்றி உள்ளனர். இது விதிமுறைகளைப் பின்பற்றாமல் நடைபெற்று உள்ளது. எனவே உரிய அனுமதி இல்லாமல், விதிமுறைகளைப் பின்பற்றாமல் மலைப்பகுதியில் கட்டடம் கட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்”

எனக் கோரப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தபோது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ,

”நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் கொடைக்கானலில் கட்டியுள்ள கட்டுமானம் உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது. இருவரும் மேற்கொண்ட கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் மேற்கொள்ளவில்லை. உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதியற்ற கட்டுமானம் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது”

என்று தெரிவித்தார்.

இந்த இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.