சென்னை: கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த BRTS(Bus Rapid Transit System) திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்துள்ளது தமிழக அரசு.

விரைவில் அரசின் சார்பில் டெண்டர் விடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை நகரின் தேர்வுசெய்யப்பட்ட 7 முக்கிய சாலைகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடமும் அரசாங்க தரப்பில் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.

பழைய மகாபலிபுரம் சாலை, ஜிஎஸ்டி காலை, கோயம்போடு – பூந்தமல்லி சாலை, குரோம்பேட்டை – துரைப்பாக்கம் சாலை ஆகியவற்றை உள்ளடக்குகிறது இத்திட்டம். ஆகஸ்ட் 3 முதல் 8ம் தேதி வரை, போக்குவரத்து துறையால், நகரின் பல பகுதிகளில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தப்படுகிறது.

பிஆர்டிஎஸ் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை கடந்த 2014ம் ஆண்டுதான் தயாரிக்கப்பட்டது. பின்னர் 2015ம் ஆண்டில் ஆலோசகர் பணியமர்த்தப்பட்டார். கடந்தாண்டு பொது கலந்துரையாடல் நடைபெற்றது மற்றும் பல்வேறு தரப்பினரின் கருத்துகள் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இத்திட்ட நடைமுறைக்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு முடிவடைந்தவுடன், அடுத்த 3 மாதங்களில், அரசு சார்பில் டெண்டர் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.