சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு  பழனியில்  நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக, இந்து அறநிலையத்துறை  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்  இன்று அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அறநிலையத் துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த 30-வது மாதாந்திர சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில்  உயர் அதிகாரிகள் உள்பட முக்கிய நபர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  தமிழ் கடவுளான முருகப் பெருமானின் புகழுக்கு புகழ் சேர்க்கின்ற வண்ணம் உலகெங்கும் இருக்கின்ற முருக பக்தர்கள் ஒன்றுகூடி பல முக்கிய நிகழ்வுகளை மேற்கொள்ளும் வகையில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துவதென்றும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும், 45,477 கோவில் பணியாளர்களுக்கு ஆண்டிற்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்திட முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

கிராம தெய்வ வழிபாட்டை ஆன்மிக அன்பர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அக்கோவில் வரலாற்றை தொகுத்து புத்தகமாக வெளியிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

தமிழ்நாட்டிலி திமுக  அரசு பொறுப்பேற்ற பின், தேர்வாணையத்தின் மூலம் 379 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதோடு, கருணை அடிப்படையில் துறையில் 24 நபர்களுக்கும், கோவில்களில் 108 நபர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளன. மேலும், 713 அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. கோவில்களில் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த 1,289 பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கூறினார்.