சென்னை: யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர் கூறியதை சுட்டிக்காட்டி, நான் முதல்வன் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் உள்ளிட்ட அரசு குடிமை பணிகளுக்கான தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் ஆகிய தேர்வுகள் முறைப்படி நடத்தப்பட்டு அதன் முடிவுகள் ஏப்ரல் 16ந்தேதி  வெளியிடப்பட்டன.

அதில்,  இந்திய நிர்வாகப் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்தியக் காவல் பணி, மத்தியப் பணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகிய பணிகளுக்கு 1016 பேர் தகுதியானவர் களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டைச்சேர்ந்த மருத்துவர் பிரசாந்த் என்பவரும் வெற்றி பெற்றுள்ளார்.  இவர், தமிழ்நாடு அளவில் 2ஆவது இடமும் அகில இந்திய அளவில் 78ஆவது இடமும் பெற்று மருத்துவர் பிரசாந்த் என்பவர் சாதனை படைத்துள்ளார்.

தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்த பிசாந்த், யுபிஎஸ்சி இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் உதவியாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இதனை சுட்டிக்காட்டி, முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளதுடன், மருத்துவர் பிரசாந்த் பேசும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், “நான் முதல்வன் திட்டம்: என் கனவுத்திட்டம் மட்டுமல்ல. நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம். நேற்று வெளியான UPSC முடிவுகளே அதற்கு சாட்சி.” என பதிவிட்டுள்ளார்.

அந்த வகையில், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர் கூறியதை சுட்டிக்காட்டி, நான் முதல்வன் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.