சென்னை:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  மருத்துவர்கள், நர்சுகள் போன்றோரிடம் காணொளி காட்சி மூலம்  ஆலோசனை நடத்தினார். ‘கொரோனா’ நோயால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்து இன்று வீடு திரும்புவோரிடமும் முதலமைச்சர் உரையாடினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் பலர், அதை மதிக்காமல் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து  தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, , தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வாா்டுகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், அங்குள்ள மருத்துவா்கள், செவிலியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களின் தன்மை ஆகியன குறித்து காணொலி வழியாக முதல்வா் பழனிசாமி கேட்டறிந்தார்.

மேலும், கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பவுள்ள நபர்களுடன் உரையாடினார்.

இந்த ஆலோசனைக்  கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.