சென்னை

மிழக 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை இன்று காலை 11 மணி முதல் தரவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் அலை கொரோனா ஊரடங்கு காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிப்பெண்கள் குறிப்பிட்ட சில வழிமுறைகளில் கணக்கிடப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டது.  இவர்கள் இன்று காலை முதல் தங்கள் மதிப்பெண் சான்றிதழை தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 11 மணி முதல் மதிப்பெண்கள் பட்டியலை இணையதளங்களில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனக்கூறி அதற்கான இணையதள பக்கத்தை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லை எனக் கருதும் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து மீண்டும் தேர்வெழுதிக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது.  இவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடத்தப்பட உள்ளது.

விரைவில் 10ஆம் வகுப்பு மதிப்பெண் விவரங்களும் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.