சென்னை:  நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக   தமிழ் மாநில காங்கிரஸ்  தலைவர் ஜிகே வாசன் அறிவித்துள்ளதுடன், நா பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறேன் என்றும்,  திமுக அரசு வாக்களித்த மக்களை ஏமாற்றி வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

தமிழ்நாடு பாஜக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன்  நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய நிலையில், இன்று தமாகா தலைவர் ஜிகே வாசன், பாஜகவுடன் கூட்டணி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். இதனால், அதிமுகவுடன் தமாகா கூட்டணி சேரும் என்ற எதிர்பார்ப்பு உடைந்துபோயுள்ளது. இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாராளுமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் கூட்டணிகளை அமைப்பதில் திமுக, அதிமுக, பாஜக தீவிரமாக செயலாற்றி வருகின்றன. திமுக கூட்டணியில், ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஏற்பட்ட கூட்டணி, பாராளுமன்றத்திலும் தொடர்கிறது. ஆனால், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில், இரண்டும் தனித்தனியாக மற்ற கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் மும்முனை போட்டி ஏற்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

இந்த நிலையில்,   பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்துள்ளது. நேற்று  பாஜக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன்  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.அப்போது  தமாகாவுக்கு சில தொகுதிகள் ஒதுக்க பாஜக முன்வந்துள்ளதாக தகவல்கள் பரவின.

இந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமாகா தலைவர் ஜிகே வாசன், பாஜக கூட்டணியில் தமாகா தொடர்வதாக அறிவித்து உள்ளார். திமுக அரசு வாக்களித்த மக்களை ஏமாற்றி வருகிறது என்று குற்றம் சாட்டியவர், வரும் நாடாளுமன்ற தேரிதலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், தமாகா இணைந்துள்ளது என்றும்,  மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அளித்து பாஜக கூட்டணியில் போட்டியிடுவோம் என்றவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என்று நம்பிக்கை தெரிவித்தவர், தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.

மேலும்,  அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறிய ஜிகே வாசன், ஒரே கருத்துள்ள கட்சிகள் கூட்டணியில் இணைவதால், அதை மக்கள் தவறாக எண்ணமாட்டார்கள் என்றும் கூறினார்.