சென்னை: திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கில், எற்கனவே சிலை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலை யில், தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. ஜூன் 3ந்தேதி சிலையை திறக்க அம்மாவட்ட அமைச்சர் எ.வ.வேலு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், நீதிமன்றம் தடங்கலை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணா நிதிக்கு சிலை அமைக்க அம்மாவட்ட திமுக சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து ஜி.கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவரது மனுவில், நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு,  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட உள்ளது. கிரிவல பாதையில் சிலை அமைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவர். மேலும் கால்வாய் அமைந்துள்ள அப்பகுதியில், கட்டுமானம் மேற்கொண்டால் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று  கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிலை வைக்க தடை விதித்ததுடன், ஆக்கிரமிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜீவா கல்வி அறக்கட்டளை மற்றும் தமிழக அரசுத் தரப்பில், சிலை அமைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த நிலம் பட்டா நிலம். அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தவர் யார் என்ற விவரங்களை கூறாமல், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் தாக்கல் செய்துள்ள இந்த பொது நல வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிடப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் குறிப்பிட்ட அந்த நிலம் பட்டா நிலம் எனக் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், பிரதான வழக்கு மற்றும் தடை நீக்க கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.