திருப்பூர்: 3 குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமாக, திருப்பூர்  தனியார் காப்பகம் மூடப்படும் என இன்று அங்கு ஆய்வு செய்த அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.  காப்பகத்தின் அஜாக்கிரதையாலும், மெத்தனப்போக்கினாலும், குழந்தைகள் மீது சரியாக கவனம் செலுத்தாத காரணத்தினாலும்தான் குழந்தைகள் இறப்பு ஏற்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

திருப்பூரில் செயல்பட்டு வந்த விவேகானந்தா சேவாலயம் என்ற குழந்தைகள் காப்பகத்தில், கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தமிழகஅரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இன்று  தமிழக சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“குழந்தைகள் இறந்த அந்தக் காப்பகத்தை பார்த்தேன். உண்மையில், குழந்தைகளுக்கான ஓய்வு அறை போலவே இல்லை அந்த இடம். ஒரு பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு நூறு மீட்டருக்கு பிறகுதான், கழிவறை உள்ளது. இரவில் கழிவறை செல்ல முடியாமல், அந்தக் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அந்தக் குழந்தைகளுடன் இரவு எந்தக் காப்பாளரும் தங்கியிருக்கவில்லை. யாராவது அங்கு தங்கியிருந்தால், குழந்தைகள் தங்களது பிரச்சினைகளை கூறியிருப்பார்கள். ஏதாவது செய்திருக்கலாம். ஒருவர் தங்கியிருக்கிறார். ஆனால், அவர் காப்பாளர் இல்லை என்று அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காப்பகத்தின் அஜாக்கிரதையாலும், மெத்தனப்போக்கினாலும், குழந்தைகள் மீது சரியாக கவனம் செலுத்தாத காரணத்தினாலும்தான் குழந்தைகள் இறப்பு ஏற்பட்டிருக்கிறது. இது நேரில் ஆய்வு செய்தபோது கண்கூடாகத் தெரிகிறது. இந்தக் காப்பக நிர்வாகம் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வந்ததால், குழந்தைகள் இறப்பு நிகழ்ந்திருக்கிறது. எனவே இந்தக் காப்பகம் மூடப்படுகிறது. இந்தக் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் ஈரோட்டில் உள்ள அரசு இல்லத்துக்கு மாற்றுவது தொடர்பாக குழந்தைகள் நலக் குழு ஆலோசனையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக சார்பில் நிவாரணத் தொகை அளிக்கப்பட்டிருக்கிறது. அரசு சார்பில், நிவாரணம் வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அதற்கான முன்மொழிவினை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். நிவாரணம் குறித்து முதல்வர் அறிவிப்பார். சம்பந்தப்பட்ட காப்பகத்தின் நிர்வாகியின் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

3 குழந்தைகள் உயிரிழந்த திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தில் இன்று தமிழகஅரசின் குழு விசாரணை…

[youtube-feed feed=1]