அமராவதி: சந்திர கிரகணத்தையொட்டி நவம்பர் 8-ந்தேதி திருப்பதி கோவில் நடை அடைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. அன்றைய தினம் சுமார் 11மணி நேரம் கோவில் மூடப்படும் என தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதம் 8ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்திர கிரகணமானது, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் மற்றும் தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில்  பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சந்திரகிரகணம், நவம்பர்  8-ந்தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை நடைபெறுகிறது. சந்திர கிரகணத்தையொட்டி, பெரும்பாலான கோவில்கள் மூடப்படுவது வழக்கமான நடைமுறை. அதன்படி, திருப்பதி கோவில் நடையும் அடைக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவில் காலை 8.40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7.20 மணிக்கு திறக்கப்படும் என்றும், சுமார் 11 மணி நேரம் கோவில் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, திருப்பதியில், விஐபி தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான விஐபி தரிசனம் ரூ.300 கட்டண தரிசனம் நேர ஒதுக்கீடு செய்யப்படும் இலவச தரிசன டிக்கெட், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும்,  மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் உள்ள பெற்றோர்கள், வெளிநாட்டு இந்தியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சலுகை பெற்ற தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கிரகணம் முடிந்த பிறகு இலவச தரிசனத்தில் மட்டுமே வைகுண்ட வளாகம் 2ல் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை சமையல் செய்ய மாட்டார்கள். அதனால், அன்னபிரசாத கூடமும் கிரகணம் முடியும் வரை மூடப்பட்டிருக்கும். இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இதற்கு ஏற்றார் போல் திட்டமிட்டு வருமாறு பக்தர்களுக்கு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

நவம்பர் 8ந்தேதி முழு சந்திர கிரகணம்!