திருமலை: திருப்பதியில் நாளை 5 மணி நேரம் பக்தர்களுக்கு  தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.

திருப்பதியில் தினசரி பலஆயிரம் பேர் ஏழுமலையான தரிசனம் செய்து வரும் நிலையில், ஆனிவார ஆஸ்தானம்  நாளைத் தொடர்ந்து, நாளை (12ந்தேதி)  5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு தொடங்கப்படும் ஆனிவார ஆஸ்தானம் 17-ந்தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, நாளை  கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் வகையில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

அதன்படி, நாளை காலை 6 மணி முதல் 10 மணி வரை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது. பின்னர், கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 11 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

எனவே 5 மணி நேர இடைவெளியில் எந்த பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. அதனால், 12-ந்தேதி வி.ஐ.பி. தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.