சென்னை: ஜூலை 17-ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

குடியரசு தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இந்த தேர்தலில் 776 எம்பிக்களும், 4,033 எம்எல்ஏக்கள் என மொத்தம் 4,809 பேர் வாக்களிக்கவுள்ளனர்.

இது குறித்து திமுக தலைமை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமைக் கொறடா கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்க முதல்வரும், தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 17-ம் தேதி காலை 10.30 மணியளவில் அண்ணா அறிவாயலத்தில் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். எனவே, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.