திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர் , அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்

மகரிஷிகளில் ஒருவரான பிருங்கி, சிவம் வேறு, சக்தி வேறு என்ற எண்ணத்தில் சிவனை மட்டுமே வணங்கி வந்தார்.  பார்வதி, சிவனிடம் பிருங்கிக்கு உண்மையை உணர்த்தும்படி சொல்லியும் அவர் கேட்கவில்லை. எனவே அவள், சிவனைப் பிரிந்து பூலோகம் வந்தாள். ஒரு புளிய மரத்தின் அடியில் தவமிருந்தாள்.

அவளுக்கு காட்சி தந்த சிவன், தன்னுள் ஏற்றுக்கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். அர்த்தநாரீஸ்வரரை “சிந்தாமணிநாதர்’ என்று அழைக்கின்றனர். இப்பகுதியில் சிவபக்தியுடைய ரவிவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். இவனது மகன் குலசேகரன் தீராத நோயால் அவதிப்பட்டான். மகன் குணமடைய சிவனை வேண்டினான் மன்னன்.

ஒருநாள் அவனைச் சந்தித்த சிவனடியார் ஒருவர், இத்தலத்து சிவனிடம் வேண்ட நோய் நீங்கும் என்றார். அதன்படி மன்னன் இங்கு வந்து வணங்க, மகனின் நோய் குணமானது. பின்பு மன்னன் அர்த்தநாரீஸ்வரருக்கு பெரிய அளவில் கோயில் கட்டினான்.

திருவிழா:

ஆனியில் பிரம்மோற்ஸவம், கந்தசஷ்டி, மார்கழி திருவாதிரை, தை அமாவாசை.

தல சிறப்பு:

இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகிறார்.இங்குள்ள புளிய மரத்தின் பழங்கள் இனிப்பு, புளிப்பு என இரட்டைச் சுவையுடன் இருப்பது சிறப்பம்சம்.

பொது தகவல்:

சந்தன நடராஜர், நாய் வாகனம் இல்லாத பைரவர், கைகூப்பிய நிலையில் யோக சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். இவையனைத்தும் வித்தியாசமான சிற்ப அமைப்புகளாகும்.

சூரியன், யோக தெட்சிணாமூர்த்தி, ஜூரதேவர், சப்தமாதர், வீரபத்திரர், பஞ்சலிங்கம், மகாலட்சுமி, சாஸ்தா, சித்தி விநாயகர், சனீஸ்வரர், நாகராஜா, நாகராணி ஆகியோரும் இங்குள்ளனர்.

பிரார்த்தனை:

பிரச்னையால் பிரிந்திருக்கும் தம்பதியர், அர்த்தநாரீஸ்வரரிடம் வேண்டிக்கொள்ள மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். சிவனுக்குரிய வலப்பாகத்தில் சந்திரனும், அம்பாளுக்கு பின்புறம் ஜடையும் உள்ளது. சிவப்பகுதி கரங்களில் சூலம், கபாலமும், காதில் தாடங்கமும் இருக்கிறது. அம்பாள் பகுதியிலுள்ள கைகளில் பாசம், அங்குசம், பூச்செண்டும், காதில் தோடும் உள்ளன.

சுவாமி பகுதி காலில் தண்டம், சதங்கையும், அம்பாள் பகுதி காலில் கொலுசும் இருக்கிறது. சுவாமி பாகத்திற்கு வேஷ்டியும், அம்பாள் பாகத்திற்கு சேலையும் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது. அம்பாள் பகுதியை “இடபாகவல்லி’ என்கின்றனர்.

அமைவிடம்:

மதுரையில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் 120 கி.மீ., தூரத்தில் வாசுதேவநல்லூர் உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் அமைந்துள்ளது.