திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் தேரோட்டம்  இன்று காலை கோலோகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் அரோகரா கோஷடத்துடன் தேர் வடம் பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர், முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வயானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.  விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஆவணித் திருவிழாவின் 8-ம் நாள் அன்று  மதியம் 12.05 மணியளவில் சுவாமி சண்முகர்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளினார். பின்னர் 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதைத்தொடர்ந்து, விழாவின்  உச்ச நிகழ்ச்சியான 10வது நாளான இன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது.  இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு சுப்பிரமணியருடன் தேரோட்டம் பல ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரகரோ கோஷடத்துன் எழுச்சியுடன்  கோலாகலமாக தொடங்கியது.

முதலில் விநாயகர் எழுந்தருளிய தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய தேரும் 4 ரத வீதிகளில் பவனி வந்தது. தொடர்ந்து வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேரானது ரத வீதிகளில் பவனி வந்து நிலையத்தை வந்தடைந்தது.  தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேரை இழுத்தனர்.

தேரோட்டத்தையொட்டி மதுரை உள்பட பல நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள்  இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த  காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.