டெஹ்ராடூன்: உத்ரகாண்ட் மாநிலத்திலுள்ள கார்பெட் தேசியப் பூங்காவில், புலிகள், யானைகளை வேட்டையாடி உண்ணும் ஒரு விநோத சூழல் நிலவுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக புலிகள் யானைகளை உண்ணாது. ஆனால், இங்கே விநோதமான சூழல் நிலவுவதால், சுற்றுச்சூழல் மாற்றம் கவலையளிப்பதாக உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்த 2019ம் ஆண்டின் மே 31 வரை, மொத்தம் 9 புலிகளும், 21 யானைகளும், 6 சிறுத்தைப் புலிகளும் இறந்துள்ளன. அவைகளுக்குள் ஏற்படும் சண்டைகள் மற்றும் எதிர்பாராத சந்திப்புகள் போன்ற காரணங்களால் அத்தகைய மரணங்கள் நேர்கின்றன.

இறந்துபோன 21 யானைகளில், 13 யானைகள் புலிகளின் தாக்குதலால் இறந்துபோனவை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இளம் யானைகள்தான் புலிகளின் தாக்குதலுக்கு அதிகம் இலக்காகின்றன. யானைகளை, புலிகள் உணவாகக் கொள்வதென்பது ஒரு தனித்துவமான அம்சம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சாம்பார் மற்றும் சீடால் இன மான்களை விரட்டிப் பிடித்து வேட்டையாடுவதைக் காட்டிலும், யானைகளை வேட்டையாடுவது புலிகளுக்கு மிகவும் எளிதாக இருப்பதாலும், மிக அதிக உணவு கிடைப்பதாலும் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கின்றன சம்பந்தப்பட்ட வனத்துறை வட்டாரங்கள்.

இந்த தேசியப் பூங்காவில் 225 புலிகளும், 1100 யானைகளும் வாழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.