டில்லி:

நாடு முழுவதும் மருத்துவம் படிக்க நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என அமல்படுத்தி உள்ள மத்தியஅரசு, அடுத்து, மருத்துவம் படித்து முடித்தவர்கள், ‘நெக்ஸ்ட்’ தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என புதிய தேர்வு முறையை கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாதால்தான், அவர்கள் மருத்துவராக பணியாற்ற முடியும் என கூறப்படுகிறது.  இந்த புதிய தகுதி  தேர்வு அடுத்த ஆண்டுமுதல் நடைமுறைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழவதும் கடந்த சில ஆண்டுகளாக நீட் தகுதி தேர்வு வைத்து, மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படும் மாணவர்கள்  இளநிலை மருத் துவப் பட்டப்படிப்பான எம்பிபிஎஸ் ஐந்தரை ஆண்டுகள் படித்து வருகினற்னர். கல்லூரியில் நான்கரை ஆண்டுகள் படித்த பின்னர், ஓராண்டு பயிற்சி டாக்டராக பணியாற்றுகின்றனர். அதன் பின்னரே அவர்களுக்கு பணி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், எம்பிபிஎஸ் முடித்த வர்கள்  ‘நெக்ஸ்ட்’  எனப்படும் National Exit Test (NEXT) என்ற தகுதித் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற வேண்டும் என மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே இதுபோன்ற தேர்வை கொண்டு வர மோடி அரசு கடந்த 2017-ம் ஆண்டு முயற்சி செய் தது. அப்போது இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்காலிகமாக ஒத்தி வைத்தது. தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் நெக்ஸ்ட் தேர்வை கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இன்று முதல் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், நெக்ஸ்ட் தேர்வுக்கான மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு கட்டாயமாக்கப்படுவதால், மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு இருக்குமா? இல்லையா? அல்லது நெக்ஸ்ட் தேர்வின் மதிப் பெண் நீட் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பது இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை.

‘இந்த தேர்வு இந்தியாவில் எம்பிபிஎஸ் படிப் பவர்களுக்கு மட்டுமின்றி, வெளி நாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருபவர்கள் நெக்ஸ்ட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா திரும்புபவர்கள்  எப்எம்ஜிஇ (FMGE) என்ற தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னரே, மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணியாற்ற முடியும் என்ற நிலை உள்ளது.

இனிமேல் அவர்கள் எப்எம்ஜி தேர்வு எழுதாமல்  நெக்ஸ்ட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் தான், மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணியாற்ற முடியும்.

இந்திய மருத்துவ கவுன்சிலின் இந்த நடவடிக்கை மருத்துவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.